நீட் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சித்ராவிடம், பெற்றோர் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் நீட் மாணவர் சேர்க்கையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சித்ரா தலைமையில், அட்மிஷன் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. நீட் மாணவர் சேர்க்கையில் உள்ள குழப்பம் சம்மந்தமாக ஏற்கனவே பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர்.
இது தொடர்பாக தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாகிகளிடம் ஓய்வு பெற்ற நீதிபதி நேற்று நேரில் விளக்கம் கேட்டார்.இதனை தொடர்ந்து மாணவர், பெற்றோர் அமைப்பினர் நீட் மாணவர் சேர்க்கை தொடர்பாக சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
இது குறித்து நீட் மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் முதல் கட்ட நீட் மாணவர் சேர்க்கை நடத்தியதாக தெரிவித்துள்ளன.
அரசு தனது மேற்பார்வையில் கவுன்சிலிங் நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், முதல்கட்ட கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர், அதில் புதுச்சேரி மாணவர்கள் எத்தனை பேர் சேர்ந்தனர். எவ்வளவு காலியிடம் உள்ளது என்று இதுவரை வெளியிடப்படவில்லை. இது கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட், அந்தந்த கல்லுாரிகள் கவுன்சிலிங் நடத்தக் கூடாது. அந்தந்த மாநில அரசுகள் ஒற்றை சாளர முறையில் வரும் 7ம் தேதிக்குள் கவுன்சிலிங் நடத்தி நீட் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.
எனவே யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசு மத்திய சுகாதார மேம்பாட்டு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்த அனுமதி பெற வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே தனியார் கல்லுாரிகளில் நீட் மாணவர் சேர்க்கையை வெளிப்படையாக நடத்த முடியும் என்றனர்.
No comments:
Post a Comment