Thursday, March 16, 2017

விடைத்தாள் திருத்தும் பணி - ஏப்., 12க்குள் முடிக்க உத்தரவு

’டெட்’ தேர்வால், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகளை, ஏப்ரல், 12ம் தேதிக்குள் முடிக்க, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 421 பள்ளிகளில் இருந்து,34 ஆயிரத்து 505 மாணவர்கள், 101 தேர்வு மையங்களில், எழுதுகின்றனர்.

இதேபோல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 98 பள்ளிகளில் இருந்து, 8 ஆயிரம் மாணவர்கள், 38 மையங்களில், பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தனித்தேர்வர்களுக்கு பிரத்யேகமாக, ஐந்து தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு பொருத்தவரை, தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள் தேர்வுகள் முடிவடைந்தன. ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, இன்று (மார்ச் 16ம் தேதி) நடக்கிறது. வரும் 30ம் தேதியுடன், அனைத்து தேர்வுகளும் முடிவடைகின்றன.

பிளஸ் 2 மாணவர்களுக்கும், வரும் 31ம் தேதியுடன், அனைத்து தேர்வுகளும் முடிவடைகின்றன. ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), ஏப்ரல் 29, 30 ஆகிய இரு தேதிகளில் நடப்பதால், பொதுத்தேர்வு மதிப்பீட்டு பணிகளை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக தற்போது, தேர்வு மையங்களில் இருந்து, நோடல் மையத்திற்கு வரும் விடைத்தாள்களை, தனித்தனியாக பிரித்து அடுக்கும் பணிகள் நடக்கின்றன. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் கொண்ட குழு மேற்பார்வையில், வரும் 31ல், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

ஏப்., 1 - 12ம் தேதிக்குள், அனைத்து பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, கோவை கல்வி மாவட்டத்தில், அரசு உதவி பெறும் மணி மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், பொள்ளாச்சியில், நகராட்சி மேல் நிலைப்பள்ளியும், விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’பத்தாம் வகுப்புக்கான விடைத்தாள்களை, எந்த மாவட்டத்திற்கு, அனுப்ப வேண்டுமென, வரும் 28ம் தேதி தான், அரசு தேர்வுத்துறை சார்பில் அறிவிக்கப்படும்.

’கோவை மாவட்டத்திற்கு வரும், விடைத்தாள்களின் எண்ணிக்கையை கொண்டு, மதிப்பிடல் பணிக்கு ஆசிரியர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

’இதேபோல், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்த, கோவை கல்வி மாவட்டத்தில், ஆர்.எஸ்.புரம், ஸ்ரீ நேருமகா வித்யாலயா பள்ளி, சுங்கம், நிர்மலா மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சியில், பி.கே.டி., மெட்ரிக் பள்ளியும், மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

’ஏப்., 3ம் தேதி முதல், பிளஸ் 2 விடைத்தாள் திருத்த, அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

No comments:

Post a Comment