Thursday, May 5, 2016

பிளஸ் 2 கருணை மதிப்பெண்ணிற்கு தடை கோரி வழக்கு

 பிளஸ் 2 தேர்வு வேதியியல் பாடத்தில் இரண்டு வினாக்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க தடை கோரி தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி பேராசிரியர் சாமுவேல் ஆசீர்ராஜ் தாக்கல் செய்த மனு: 
அகில இந்திய போட்டித் தேர்வு, ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில்பிளஸ் 2 பாடங்களை மாணவர்களுக்கு ஆழமாக புரியும் வகையில், ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என அரசு அறிவித்தது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 4 முதல் ஏப்.,1 வரை நடந்தது. என் மகன் ரிச்சர்டு சாமுவேல் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்றார்.மார்ச் 14 ல் வேதியியல் தேர்வு நடந்தது. 
பகுதி 1 ல் வினா 18 (1 மதிப்பெண்), பகுதி 4ல் வினா 70 ல் , பி ( தலா 5 மதிப்பெண்) இடம் பெற்றிருந்தன. வினா 18 மற்றும் 70 பிக்கு தவறாக விடையளிக்க முயன்றிருந்தாலும், முழு மதிப்பெண் வழங்கப்படும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. வினா 18 சரியானதே. அதில் எந்த தவறும் இல்லை. அது பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. பாடத்தை முழுமையாக படித்திருந்தால் விடையளித்திருக்க முடியும். அதுபோல்தான் வினா 70 பியும். கருணை மதிப்பெண் 6 வழங்கினால், வேதியியலில் அந்த 2 வினாக்களுக்கும் தவறாக விடையளித்திருக்கும் மாணவர்கள் 194 மதிப்பெண் பெற்றிருக்கும்பட்சத்தில், கருணை மதிப்பெண்ணால் 200 க்கு 200 பெற வாய்ப்புள்ளது. உண்மையில், சரியாக விடையளித்த மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
வினா 18 மற்றும் 70 பிக்கு சரியான விடையளித்த மாணவர் களுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டும். கருணை மதிப்பெண் வழங்கக்கூடாது. இவ்வழக்கு முடிவுக்கு வரும் வரை, பிளஸ் 2 தேர்வு முடிவை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, சாமுவேல் ஆசீர்ராஜ் மனு செய்திருந்தார். 
நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.என்.பிரகாஷ் அமர்வு பள்ளிக் கல்வித்துறை செயலர், அரசு தேர்வுகள் துறை இயக்குனர், பள்ளிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஜூன் 6 க்கு ஒத்திவைத்தது. அரசு வழக்கறிஞர் ஆயிரம் செல்வகுமார், மனுதாரர் வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம் ஆஜராயினர்.

No comments:

Post a Comment